10/16/2006

தேன்கூடு அக்-06 படைப்புகள் விமர்சனம் 21 to 30

இலக்கிய விமர்சனம் என்பது, திற்னாய்வாளர்களும், தகுதியில் சிறந்த ஆர்வலர்களும் ஈடுபடுவது. எப்பொழுதேனும், வேறு சிலரும் ஒரு பழக்கத்திற்காக விமர்சனம் செய்து பார்க்கத் துணிவதுண்டு (என்னைப்போல!). ஆனால், இத்தகைய திடீர் விமர்சகர்கள் ஒரு கட்டுரையையோ கதையையோ முழுமையாகத் திறனாய்வு செய்பவர்களல்ல, ஆனால் பெரும்பாலும், அவற்றின் அறிமுகத்தினைத் தருபவர்கள்.

ஒரு விமர்சனம் எழுதும் போது, கவனத்தில் கொள்ளவேண்டியவை எவையென்று கேட்டால் கிடைக்கும் பதில்...:
அந்த படைப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதன் குறிப்பு, நிறைகள்,குறைகள்.

ஒரு விமர்சனம் எழுதுவது எந்த விதத்தில் விமர்சகர்க்கு உதவும் என்ற கேள்வி எழலாம். அதற்கு பதில்...

1) தகவல் தேடல் : விமர்சனம் எழுதுவதற்காக நீங்கள் செய்யும் தேடல்கள். உபயோகப்படுத்தும் புத்தகங்கள். போன்றவை
2) நிறை குறைகளை தூக்கிப் பார்த்தல் : படைப்பின் நிறைகளையும் குறைகளையும் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய உங்களது திறமை.

மேற்கண்ட இந்த இரண்டு ஏரியாக்களிலும், ஒருவரின் திறமை மேம்பட விமர்சனங்கள், திறனாய்வுகள் உதவி செய்கின்றன.


ஒரு விமர்சனம் கீழ்கண்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்:

அ) அமைப்புடன், விமர்சிப்படும் பொருளை தொடர்புடனும் நேரடியாகவும் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும்
ஆ) மொத்தமாக எழுதப்படும் விமர்சனமே ஒரு கட்டுரையாக அமைவது அவசியமில்லை. சரியான விதத்தில் குறைவான வார்த்தைகளுடன் இருந்தால் போதுமானது.
இ) எங்கெல்லாம் படைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்
ஈ) படைப்பின் அடுத்த கட்டத்தின் முன்னேற்றத்திற்கான அல்லது தேடலுக்கான கேள்விகளைத் தர வேண்டும்.


சரிதான்.. இவ்வளவும் இருக்கு. ஆனால் இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? இதெல்லாம் கவனிக்காம விமர்சனத்துக்கு வந்தாச்சே! **SAD**

சரி, சரி வந்ததுதான் வந்தே, பேசிட்டு போயிடுன்னு சொல்றீங்களா.. ம் இதோ....


---

மரணம் - மாபெரும் விடுதலை - சிறுகதை - வினையூக்கி

காதல் தோல்வியிலிருந்து விடுதலை? பெரும்பாலானவர்களின் காதலின் தோல்வியில் இந்த தற்கொலை வலி நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்? அவமானம் தரும் வேதனைதான். அவமானம் என்பது அவ்வளவு தவறா? அவமானம் தாங்க முடியாதா? தாங்கினால் என்ன தவறு? இதெல்லாம் அந்த நேரத்தில் ஏனோ தோன்றுவதே இல்லை. காதல் தோல்விக்கென்று அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் தோல்வியின் போது ஒரு தற்கொலை வேதனை எழுத்தான் செய்கிறது.

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், கையில் வாளெடுத்த ஒவ்வொருவரும், தோல்வி நேரத்தில், தன் வாளால் தன்னையே அழித்துக்கொள்வதை கண்டு பிடிக்கலாம். பகத்சிங்கின் குரு ஆசாத் - ஆகட்டும், ஹிட்லர் ஆகட்டும் யாராக இருந்தாலும், அழிவு அல்லது தோல்வி நெருங்கும் போது அதைத் தாங்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

காதல் தோல்வியினால் மனமுடைந்து, மனதிற்கு நெருங்கிய எழுத்தாளரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் கதாநாயகன். சொல்லியபடி எழுத்தாளரும் வந்து போக மனநிம்மதியடைகிறார். ஆனால் இதில் வேடிக்கை, வந்த எழுத்தாளர் நேற்றிரவே இறந்துவிட்டவர் என்பதுதான்!

அருமையான கதை. நன்றாக எழுதியும் இருக்கிறார். கண்டிப்பாக படிக்கலாம்.

குறை: எழுத்துப்பிழைகள், உரையாடல்களில் இயல்பு தமிழும் உரைநடைத் தமிழும் கலந்துவருவது சற்று இடறுகிறது (உதா:லீவு போட்டுட்டு ). நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லை. இதில் அடுத்த முறை கதாசிரியர் கவனம் வைப்பார் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள் வினையூக்கி.


***
வாங்கிய விடுதலை. - வசந்த்



விடுதலை - அதிலும் கஷ்டப்பட்டு வாங்கிய விடுதலை வீணாகப் போவதா?! வசந்த் சொல்லும் ஒவ்வொரு இல்லைகளும் தினசரி நாம் காணுபவைதான்.

எத்தனையோ இல்லாத போதும்,

வாங்கிய விடுதலை
வீண்
போகவில்லை...!

- அருமையான ஒரு கவிதையுடன் வந்திருக்கிறார் வசந்த். கொஞ்சமே கொஞ்சம் நீளம் அதிகம். ஆயினும் படிக்கலாம்.

வாழ்த்துக்கள் வசந்த்.

மாணிக்கம் - பா.முரளிதரன்

விடுதலை உணர்வில் இரண்டாம் உலகப்போரினை இந்தியாவுக்குச் சாதகமாக பயன்படுத்த ஐ.என்.ஏ செய்த முயற்சி, அதில் ஈடுபட்ட ஒரு பெரியவரின் சந்திப்பு. இதனை உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார் முரளி. இன்னமும் நல்ல ஸ்கோப் உள்ள கதை. குறிப்பிட்ட சாதி பற்றிய கமெண்ட் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

வாழ்த்துக்கள் முரளிதரன்.

ஓர் இரவில்….தீபாவை மீட்க - கடல் கணேசன்



விகடன் மாணவ பத்திரிக்கை நிருபர் என்பது இளைய தலைமுறையின் கனவுகளில் ஒன்று என்றால் மிகையாகாது. மனசும் உடம்பும் துள்ளுகின்ற வயசு அது. சென்னையைத் தாண்டிய தமிழ்நாட்டின் பல மூலைகளிலும் எத்தனையோ இளைய தலைமுறைகளின் ஒரே பொழுது போக்கு பத்திரிக்கைகள்; அதில் நிருபர் என்பது ஒரு தைரியமான கனவு. சென்னை அப்படி அல்ல. இங்கு படிப்பே பிரதானம்.

ஒரு மாணவ நிருபராக இருந்த காலகட்டத்தில், தீபா என்ற பெண்ணை விபசாரக் கும்பலிலிருந்து எப்படி விடுவித்தார் என்பதனை சற்றும் சூடு குறையாமல் திறமையாகச் சொல்லியிருக்கிறார். நடுநடுவே அடைப்புக்குறிக்குள் சுவாரசியமான கமெண்ட்களும் கூட.

வாழ்த்துக்கள் கடல் கணேசன்.


ராஜகுமாரன் - நெல்லை சிவா



முதிர் கன்னிகளின் பிரச்சனை - மனப்புழுக்கத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்தனை என்ற விதத்தில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். சரளமான எழுத்து. படிக்கும் போது, 5 பெண்கள் என்பதால், யார் என்ன என்ற குழப்பம் வருகிறது. மற்றபடி மிகவும் நல்ல கதை என்று தான் சொல்லவேண்டும். படித்து முடிக்கும் போது, கடைசி பெண்ணுக்குத் திருமணம் என்ற சந்தோசத்தைவிட, இத்தனை பெண்களுக்கும் திருமணம் நடக்க வில்லையே என்ற வேதனைதான் மனதில் நிற்கிறது. இது படைப்பின் வெற்றியா தோல்வியா?! தெரியவில்லை.

வாழ்த்துக்கள் நெல்லை சிவா



வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு… - த.அகிலன்

தும்பிகளைப் பிடித்து விளையாடும் விளையாட்டு, வண்ணத்துப்பூச்சிகள் என்று செல்லும் கதை, தும்பியைப் போன்ற ஹெலிகாப்டரின் அறிமுகம் வரும் போது சட்டென்று வேறு பக்கம் எடுக்கிறது. "ஒர் நதியைப்போல ஒரு புன்னகையைப்போல , ஓர்பூவின் மலர்தலைப்போல , நான் இழந்துபோன ஊரின் விடுதலையும் கனவுகளும் மறுபடியும் வரக்காத்திருக்கிறேன்." - என்கிறார். இந்த படைப்பிற்கு அருமையான விமர்சனங்கள் பின்னூட்டத்திலேயே எழுதிவிட்டார்கள் என்பதால், அதனையே எடுத்தெழுதிவிடுகிறேன்.

நம் தாயக மணம் கமழ, சுதந்திரத்தை ஒப்புவமையோடு நீங்கள் தந்த விதமே தனியழகு - கானாபிரபா
உங்கள் ஏக்கமும் வலியும், ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்குது - குமாரி


வாழ்த்துக்கள் அகிலன்.

விதை. சரவ்.


விடுதலை அடையாத தேசத்தின் ஒரு இளைஞன் - எப்படி விடுதலை வேள்வியில் தன்னையும் அறியாமல் ஈடுபடுகிறான் - விதையாக உருவாகுகிறான் என்பதன் ஒரு கற்பனைப் படைப்பு. படிக்கும் கடைசி விநாடி வரை சஸ்பென்ஸ் உடையாமல் செய்திருக்கிறார். படிக்கும் போது மனக்கண் முன் காட்சிகள் விரிகிறது. முக்கியாக படித்து முடித்த பிறகு! கதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாமோ?

வாழ்த்துக்கள் சரவ்.

விடுதலை - சேவியர்



விடுதலை விரும்பிகள் அடிமையாவதும், அடிமையாக இருப்பவர்கள் விடுதலை தேடுவதும், ஒரு சுழல் என்கிறார். கவிதைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் இது குறித்த அதிகம் எழுத முடியவில்லை.:-(



இரகசியம். - வசந்த்

மீண்டும் ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் வசந்த். பல விதங்களில் புதிய கோணத்தில் எழுதுவது இவருக்கு கை வந்ததாக இருக்கிறது. விடுதலைப் போராளிகளின் ஒரு பக்கம், காதல் செண்டிமெண்ட், இராணுவச்சூழல் என்று கலவையாக இருக்கிறது இந்த கதை.

வாழ்த்துக்கள் வசந்த்.

கனம் - Badnewsindia


கனம் என்ற தலைப்பிற்கேற்ற கதை. எது விடுதலை ? வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் தராமல் செல்வதே விடுதலை என்று சொல்கிறார்?! கதை அமைப்பு, எழுதிய விதம் இவற்றில் ஆசிர்யர் வெற்றி பெற்றிருக்கிறார். இயல்பான நிகழ்ச்சியாக பேச்சுக்களாக உறுத்தாததாக இருப்பது ஒரு முக்கிய காரணம். ஆனந்தம் பாக்கியம் காதல் வாழ்க்கையை பற்றி அழகாகப் புரிய வைக்கிறார். சிறு சிறு வரிகளில் வாழ்கையின் பல நிகழ்வுகளை தெள்வாகத் தொடத்தெரிந்திருக்கிறது. ஆரம்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், கதைக்கு ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும். முடிவும் அவ்வளவு அழுத்தமில்லை என்று நினைக்கிறேன். அழுத்தமான காரணம் இல்லாமல் மரணத்திற்கு அழைத்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ஆனால்,அதிர்ச்சியைத் தருவது எழுத்தாளரின் நோக்கமென்றால், அதில் வெற்றிதான்.

நிறை: நேரடியாக மனதின் முன் பாத்திரப் படைப்புகளை நடமாட விட்டது. எழுத்து நடை.
குறை: எழுத்துப்பிழை, ஆரம்பிப்பதிலும், திடீர் முடிவிலும் அழுத்தம் தரச் செய்வதில் ஒரு சிறு சறுக்கல் இருப்பதாக ஒரு எண்ணம்.

வாழ்த்துக்கள் Badnewsindia

(விரைவில் அடுத்த பத்து...)

10/08/2006

தேன்கூடு அக்-06 படைப்புகள் விமர்சனம் 11 to 20

'ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்' என்ற கேள்விக்கு என்னுடைய பதில், உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

விமர்சனங்கள் எப்பொழுதும் ஒரு பக்கத்தை மட்டுமே பிரதிபலிப்பவை. எனக்குத் தெரிந்தது, என் கண்ணோட்டத்தில் இப்படி, என்ற விதத்தில் எழுதப்படுபவை. ஆனாலும் இதனை ஒத்துக்கொள்ளாமல், நான் அறிந்ததை வைத்து எழுதப்படும் விமர்சனமே முடிவிலும் முடிவானது என்று வாக்குவாதம் செய்பவர்கள் ஏராளம்.

எப்படி ஒரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பிலும் தன்னைத் தானே காண்கிறானோ அதே போல, விமர்சனங்களிலும் எழுதுபவன் தன்னையே காண்கிறான். இப்படிச் செய்யப்படும் விமர்சனங்கள் பிறருக்காக திருத்தி எழுதப்பட்டால் அது சரியான விமர்சனமாகுமா? இந்த கேள்விக்கு பதில் அனைவருக்கும் தெரியும், ஆகாதென்று. சரியோ தவறோ தெரிந்ததைச் சொல்லி, தவறை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது.

இனி, அடுத்த பத்து படைப்புகளுக்குள் நுழைகிறேன்.

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகள் இங்கு.

********
11. தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ரயில் பயணம். சிறுவனுக்கு ஊட்டும் தாய். நினைவலைகள் பின்னோக்கி பறக்கிறது. கடைசி பாராவில் ட்விஸ்ட் வைக்கிறார். படிக்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று. ஆசிரியர் சுவாரசியமாக எழுதியிருக்கிறார். படித்து முடித்த பிறகு சற்றே சிந்திக்க வைக்கிறது இந்த கதை. நேரடியான உணர்வுகளைத் தராமல், தள்ளி நின்று யோசிக்க வைக்கிறது. பால் மாறுவதனால் ஏற்படும் அதிர்ச்சி குறைய சில நிமிடங்களாகும். இது எழுத்தாசிரியரின் வெற்றி.

நிறை: சுவையான சில வாக்கியப் பயன்பாடுகள். லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய். போன்றவை.

குறை: ஆசிரியர், வாக்கிய அமைப்பில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். பல இடங்களில் இடறல்கள் உண்டு. நிறுத்தல் குறிகள் உபயோகப்படுத்துவதிலும் சில இடங்களில் தடங்கல்கள்.
எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கலாம்.
//தெருமுக்கு// - பிரித்து எழுதியிருந்தால் தெளிவாகப் புரியும்.
//உறைத்த சண்டாளச் சட்டியினோடு // - உறைக்கும் சண்டாளச் சட்டினியினோடு என்று இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
//இருக்குமாதலாம் // - இருக்குமாதலால்

வாழ்த்துக்கள் ராகவன்.

12. அப்பாவி அடிமைகளுக்கு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கட்டாயம் படிக்க வேண்டிய ஆக்கங்களில் ஒன்று. வித்தியாசமான படைப்பும் கூட. அப்பாவி மனிதனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தடங்கல்கள் தடைகள் சிறைகள். இதிலிருந்து இவர்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்ற கேள்வியை முன்னிருத்துகிறார் ஆசிரியர். இந்த படைப்பின் ஹை-லைட் ஒவ்வொரு சூழ்நிலையையும் பேச்சை வைத்தே புரியவைப்பது.

அப்பாவி அடிமைகள் - இந்த அடிமைத் தலையிலிருந்து விடுதலை என்பது இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே இல்லை என்பதுதான் படைப்பின் விசேசம்.

வாழ்த்துக்கள் லக்கிலுக்.

13.
ஜெனி - சிறுகதை
^^^^^^^^^^^^^^^^^^^

கலை இலக்கியத் துறைகளில் பெரும்பாலான படைப்புகளின் வெற்றிக்கு பல நேரங்களில் காரணமாக இருப்பவை, தாக்கங்கள். இந்த தாக்கங்களில் மிக முக்கிய தாக்கம் 'காதல்' அல்லது 'காதல் தோல்வி'. தன்னில் இருந்த காதலை எழுத்தாளன் மிகத் திறமையாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். அதனால்தான் இன்றும் காதல் குறித்து ஏராளமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எழுத்தாள காதலனிடம், காதலி என்னைப் பற்றி எழுதக்கூடாதென்று சொல்லிவிட, இன்று எழுத்தாளன் ஒரு விஞ்ஞானக்கதாசிரியனாகி வெற்றியும் பெற்றிருக்கிறான் என்கிறார் ஆசிரியர். காதலி, கதாநாயகிடம், 'உன்னுடைய எழுத்துலகிலிருந்து விடுதலை கொடு' என்று சொல்வதுதான் ஹைலைட். படிக்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று

நிறை: காதலி, காதலனிடம் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் நிஜவாழ்க்கையின் நிதர்சனங்கள்.
இந்த பகுதியினை இவ்வளவு சரளமாக எழுதியதற்கு ஆசியருக்கு ஒரு ஷொட்டு கொடுக்க வேண்டும்.

குறை: பழைய சந்திரபாபு(?) என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் பழைய சந்திரபாபுவாக கருதப்பட்டிருந்தால், இதுசரியாக இருக்கலாம்.
நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு பேச்சின் முன்னும் பின்னும் "" போன்ற குறியீடுகளை இட்டு தனித்துக் காண்பிக்கச் செய்வது வழக்கமான எழுதும் முறை. இதனை ஆசிரியர் மிக நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக கீழ்கண்ட விதத்தில் எழுதுவது படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்:

"எக்ஸ்-க்யூஸ் மீ சார்.. உங்க ஆர்டர்" - என்று பேக்கரி பையன் பப்ஸையும் ஜூசையும் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.
"ஜெனி என்ன சாப்பிடுற?" - அவள் பதில் எதிர் பாராமாலே அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தான். 1

காதல் மட்டுமே கொண்டு சமூதாயக் கதைகள் எழுதப்படுவதில்லை.. என்று மறுக்கும் எண்ணமும் வருகிறது! இருப்பினும், இதில் தவறில்லையென்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் வினையூக்கி.



14. விடுதலைத் திரு நாளில்...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


வசந்த் அவர்களிடமிருந்து மீண்டும் ஒரு வித்தியாசமான கோணத்தில் ஆக்கம். சுவாரசியமே இல்லாமல் படிக்க ஆரம்பித்தாலும், நடுவில் ஒரு பிடி கிடைத்து, கடைசியில் முடிக்கும் போது முகத்தில் ஒரு புன்னகையை நிச்சயம் வரவழைக்கிறது. ஒவ்வொரு படைப்பிலும் ஆசிரியர் வித்தியாசம் காட்டுவது பாராட்டப்பட வேண்டியது.

வாழ்த்துக்கள் வசந்த்.


15. நினைக்க மறந்த கவிதை


பள்ளியில் படிக்கும் காலங்களில் பூனை கதை படித்திருப்பீர்கள். தன் கண்ணை மூடிக்கொண்ட பூனை உலகமே இருண்டு விட்டதாக நினைத்ததாம். எதற்காக அந்த கதை என்று அப்பொழுது முழுமையாகப் புரியவில்லை. மனித மனதின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றும் இதுதான் என்பதும் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு உலகமே. தன்னைச் சுற்றியுள்ள உலகில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விடுதலைக்கு ஆசைப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கதையிலும் நடக்க இயலாத கதா நாயகி தனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் என்னென்ன செய்வார் என்பதைச் சொல்லி ஒவ்வொருவரின் அடிமனது ஆசைகளையும் தொட்டு எழுப்பியிருக்கிறார்.

நிறை - சரளமான நடை. கதாநாயகியின் ஆசை. கடைசி பத்தியில் மட்டுமே தெரியவரும் கதாநாயகியின் முடம். அதனால் ஏற்படும் ஆச்சரியம்.

என் கருத்து: இன்னமும் அழுத்தமாக சில விசயங்களைச் சொல்லியிருக்கலாம். எந்த வருடத்தின் படிப்பு. இந்த வயசில் இந்தளவுக்கு மெச்சூரிட்டி இருக்குமா? முதல் வரியைச் சொன்னவுடன் வகுப்பு மவுனமாகிறது என்பதை அப்சர்வ் செய்கிறாள், "அவங்க செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை அழுத்தும் அந்த அபிப்பிராயங்களை வெட்ட வேண்டியது மட்டும் தான்." என்பதையெல்லாம் படிக்கும் போது, கொஞ்சம் பெரிய வயதினைச் சேர்ந்தவரோ அல்லது ஆசிரியையோ என்று எண்ணத்தோன்றுகிறது. கதாப்பாத்திரத்தின் அறிமுகம் கொடுப்பதில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் தந்திருக்கலாம் எனத் தோன்றுவது தவிர்க்கமுடியவில்லை.

வாழ்த்துக்கள் பொன். சிதம்பரகுமாரி.

16. உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் .
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆளாளுக்கு பக்கம் பக்கமாக எழுதியும் புரியாத அல்லது புரிந்து கொள்ள குழப்பமான விசயம் ஒரு கார்டூன் மூலமாக மட்டும் புரிந்து கொள்ளப்பட்டு விடும் என்று சொல்வார்கள். இதனை பல முறை நான் புரிந்து ரசித்திருக்கிறேன். விகடனாகட்டும், குமுதமாகட்டும் தலையங்கம் பக்கத்தின் அருகில் இருக்கும் கார்டூன்களைத் தான் கண்கள் முதலில் நோட்டமிடும். அதுவும் தேர்தல் நேரமென்றால் கேட்கவே வேண்டாம். கழுதை, குதிரை என்று படம் வரைந்து பெயர் குறித்து கலக்கிவிடுவார்கள்.

சோம்பேறி பையன் இந்த போட்டிக்கு டைமிங்காக ஒரு கார்டூன் வரைந்து அனுப்பியிருக்கிறார். இன்றைய உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தைப் சிறை பிடித்திருக்கும் சிக்கன்குனியா, 'இதிலிருந்து முதல்ல விடுதலை வாங்கிக்குடுங்க... அப்புறம் டிவி குடுக்கலாம்' என்கிறார்.

நிறை - சிந்தனை. கார்டூன். முயற்சி.
ஆரம்ப கட்ட முயற்சியென்பதால், குறைசொல்ல எதுவுமில்லை. ஒரேயொரு கமெண்ட் மட்டும்...

ராசுக்குட்டி: முதல் முயற்சி நன்றாக உள்ளது, தொடர்ந்து வரையுங்கள்...சித்திரமும் கைப்பழக்கம் ;-)

வாழ்த்துக்கள் சோம்பேறி பையன்.

17. விடு தலை
^^^^^^^^^^^^^

டாப் கிளாஸ் கட்டுரை ஒன்றை படிக்க பொறுமை இருந்ததெனில் இந்த கட்டுரையை நீங்கள் கட்டாயம் படிக்கலாம். ஆரம்ப கட்டத்தில் தத்துவ விசாரம் போலத் தோன்றினாலும், போகப்போகச் சூடு பிடித்து கடைசியில் முழு வேகத்தில் முடிக்கிறார். தலைப்பை விடுதலை என்று எழுதாமல் "விடு தலை" என்று பிரித்து எழுதி, அதற்கும் கட்டுரையின் முடிவில் பஞ்ச் வைத்திருக்கிறார்.

பிளேட்டோ, காந்தி, நேதாஜியின் சிறுவர் படை, பாரதியின் தில், லால் பகதூர் சாஸ்த்ரி என்று பலரையும் தொடும் இவர், கடைசியில் காமராஜரையும் குறிப்பிடுகிறார். முக்கியமாக நேதாஜியின் சிறுவர் படை குறித்த நிகழ்ச்சி நான் இதுவரை அறிந்ததில்லை. இனி பல காலம் நினைவில் இருக்கும்.

நிறை : அருமையான கட்டுரை. ஏராளமான மேற்கோள்கள்.
குறை : சுதந்திரம் - விடுதலை என்ற இரண்டிற்குள் உள்ள தொடர்பு ஓரளவிற்குச் சொல்லப்பட்டாலும், சுதந்திரம் என்பதே விஞ்சி நிற்பதாக ஒரு எண்ணம். இருப்பினும், கட்டுரையின் நோக்கம், எழுத்து, கருத்து இவற்றை மனதில் வைத்து, இதனை நான் சிறு குறையாகவே பார்க்கிறேன்.

படைப்பிற்கு வாழ்த்துக்கள் சைதை முரளி

18. விடுதலையா வாழ்க்கை ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


அலுவலக வாழ்க்கை என்பது பல நேரங்களில் இனிமையாக இருப்பதும் இல்லாமல் போவதும் கிடைக்கப்போகும் சூப்பரவைசரைப் பொருத்தது என்று சொன்னால் நிச்சயம் மிகையாக இருக்காது.அதிலும் அந்த சூப்பரவைசர் நண்பரைப் போல் பழகுவார் என்றால் அந்த அலுவலக நேரமே மகிழ்ச்சிகரமானதாக மாறிவிடும். சில நேரங்களில் கட்டுப்பாடான மேனேஜர்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போவதும் ஏற்படுவதுண்டு; கண்டிப்பான அப்பாவைப் புரிந்துகொள்ளத் தவறும் மகவு போல.

சமீபத்திய ட்ரெண்ட் படி, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்கு மிகவும் அதிக மதிப்பு கொடுக்க வேண்டுமென்பது 'நல்ல மேனேஜர்'களின் கடமையாகக் கருத்தப்படுகிறது.

கதையில் வரும் இந்த மேனேஜர் - கொடுமைக்காரர் என்று கதாநாயகன் கருதுகிறார். ஆனால் புது மேனேஜர் வந்த பிறகுதான் பழைய மேனேஜரின் அருமை புரிகிறது.

ஒருவரியில் : தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல். என்று சொல்லும் கதை.

நிறை - வேகமாக படிக்க முடிகிறது. சுவாரஸியமாக எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமாக புது மேனேஜரின் ஒவ்வொரு கண்டிசனும், பழைய மேனேஜரின் கண்டிசனைத் தூக்கி சாப்பிட்டிருப்பதாக எழுதியிருப்பது சுவையாக இருக்கிறது.

குறை - .. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கதையின் தலைப்பைத் தொடுகிறார். கடைசி வரியிலும் பஞ்ச் வைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, எங்கோ எப்.எம் ரேடியோவில் 'விடுதலையா வாழ்க்கை' என்ற பாபா பாடல் ஒலித்தது. என்பது போல.. (இது உண்மையில் குறையென்று சொல்ல இயலாது). மிக முக்கிய குறை, கதையின் ஓவர் சிம்ப்ளிசிட்டி. அடுத்த மேனேஜர் இப்படித்தான் செய்வார் என்பது தெளிவாக படிப்பவருக்குப் புரிந்துவிடுகிறது. அதுவும் முதல் கண்டிசன் போட்டவுடனேயே கதை முடிவுக்கு வந்துவிடுகிறது.

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

19. தேன்கூடு போட்டி/விடுதலை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சன்னியாசம் பெற்றுக்கொள்வது என்பது 'ஓடிப்போவது' போல அனைவருக்கும் மிகப் பழக்கமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அதுவும் சமீபத்திய படங்கள், மின்சாரக்கனவு, ஹேராம், பாரதி போன்றவை முதல் முந்தைய படங்கள் வரை சன்னியாசம் குறித்து அவ்வப்போது ஏதாவது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய தேதியில் சாமியாராவது என்பது சுலபமில்லை; நிறைய பெண்களை வைத்து மேய்க்க வேண்டும் - இது ஒரு திரும்பத்திரும்ப எழுதப்படும் க்ளிஷே ஜோக்.

சன்னியாச வாழ்க்கை விரும்பும், ஒரு இளைஞனின் கதையைச் சொல்கிறார் முரளிதரன்.

என்னைப் பொருத்த வரை, நிறைகளை விட, இந்த கதையில் குறைகளே அதிகம். அக்கரைக்கும் இக்கரைக்கும் தாவும் எழுத்து. முதல் பாதியில் வரும் நண்பர்களிடையேயான பேச்சு படிக்க சுவாரசியமாக இருந்தாலும், டக்-கென்று முடிந்துவிடுகிறது. அழுத்தமான காரணம் இல்லாமல்(அல்லது தெரியவராமல்) சன்னியாசம் வாங்கச் செல்லும் நாயகன். அதே போல அழுத்தமான காரணம் இல்லாமல் வைராக்கியத்தை விடுகிறார். போதாத குறைக்கு, தாமரை இலை தண்ணீர் டயலாக் வேறு. நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லாததால் படிப்பதற்கும் சிரமம்.

மேற் சொன்ன கருத்துக்களைக் குறித்து வருத்தப்படாமல், அடுத்து வரும் ஆக்கங்களில் ஆசிரியர் சிறப்பாக செய்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் முரளிதரன்.

20. எனக்கு எப்போ விடுதலை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விடுதலை என்பது எதிலிருந்து என்பது எப்பொழுதும் ரிலேட்டிவ் என்று முன்னரே சொல்லியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை இது. கட்டாயம் படிக்க வேண்டிய கதை. இலங்கைத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையும், கதை மாந்தர்களும் நெருக்கமாக உணர வைத்தது ஆசிரியரின் திறமை. கதையின் ஆரம்பமாகட்டும் முடிவாகட்டும், சரியான விதத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. தவறாமல் படியுங்கள்.

வாழ்த்துக்கள் மயூரேசன்.

(தொடரும்)

10/05/2006

தேன்கூடு அக்-06 படைப்புகள் விமர்சனம் 1 to 10

விடுதலை - எதிலிருந்து? எப்படி?

இந்த கேள்விக்கு பதில் எப்பொழுதும் ரிலேடிவ். ஏனெனில் உலகார்த்தமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து பெறப்படும் விடுதலை மற்றொன்றில் அடிமைப்படுவதாக ஆகிவிடுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது.

அர்த்தமுள்ள இந்துமதம் - கட்டுரைத் தொகுப்பில் ஒரிடத்தில் கண்ணதாசன், சிகரெட்டிலிருந்து விடுபட, வெற்றிலையைத் தேட முயல, பின்னர் வெற்றிலையிலிருந்து விடுபட வேறு எதனையாவது தேட வேண்டிவரும் என்ற கருத்தில் எழுதப்பட்ட வரிகள் இப்பொழுது நினைவிலாடுகிறது.

விடுதலை என்ற இந்த தலைப்பு எத்தனையோ சிந்தனைகளைத் தூண்டி விடக்கூடியது. ஒவ்வொரு சிந்தனைகளும் எப்படி என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கிறது.

விமர்சனங்கள், ஆக்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரங்கள். அங்கீகாரத்திற்கு ஆசைப்படாத எழுத்து உண்டா? விமர்சித்தல் என்பது கூட ஒரு படைப்பிலக்கியமே. திறனாய்வு என்றும் இதனைச் சொல்வதுண்டு. விமர்சிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் , இந்த முயற்சிக்கு ஒரு காரணம். இத்தகைய விமர்சனங்கள் எழுதலாம் என்ற எண்ணத்திற்கு முன்னோடியாக இருந்த சோம்பேறிப் பையனுக்கு என் வணக்கங்கள்.

இங்கு எழுதப்படும் விமர்சனங்கள், என் பார்வையில் படைப்பு குறித்த எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக மட்டுமே இருக்கக்கூடும். இதிலிருக்கும் தவறுகளுக்கு என்னை மன்னித்து எழுத்தாளர்கள் இந்த விமர்சனங்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எனக்கு அறியத் தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- யதா.
-----------------

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகள் இங்கு.

1. ஆசை (சிறுகதை)
^^^^^^^^^^^^^^^^^

//சொந்த காசை செலவு செய்து கட்சி வேலைக்கு காய்ந்ததால், இன்றைக்கு அடுத்த வேளை உலை வைக்க கட்சி ஆபிஸ் வாசலில்தான் நிற்க வேண்டிய வாழ்க்கை.//

படிக்க வேண்டிய ஒரு சிறு கதை.

கதை 'விடுதலை' என்ற கதா நாயகனைச் சுற்றி நகர்கிறது. கதா நாயகனது நினைவுகள், கருத்துகள் தொடர்பான பேச்சு என்று நகர்கிறது. சுதந்திரம் கிடைத்து அறுபதாண்டுகளையும் கடந்த நிலையில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் சாதீயத்தின் நீட்சி, அரசியலின் நிலை, தொண்டர்களின் வாழ்க்கை முறை இவற்றினை யதார்த்தமாகத் தொட்டுப் பார்க்கிறார். கதா நாயகன் இதிலிருந்து
மேலேறி வர வேண்டும் என்ற ஆவலுள்ளவன். ஆனால், வாய்ப்பிற்கு சுற்றியுள்ள மாந்தர்களையே நம்பவேண்டிய நிலை.

நிறை: எதார்த்தமான எழுத்தும், சம்பவ அமைப்புகளும், வார்த்தை பிரயோகங்களும். ஆரம்பத்தில் வீரனைக் கும்பிடாமல் எதையும் செய்ய மாட்டான் என்று ஆரம்பித்து, முடிவில் அதே விதத்தில் முடிப்பது.

குறை: கதாநாயகனது பெயர் விடுதலை என்று எழுதியிருப்பது தவறு. இந்த பெயர், தலைப்பிற்காக திணிக்கப்பட்ட விடுதலை என்ற பெயரோ என்ற எண்ணம் தருகிறது. இதனால் கதை மாந்தனது விடுதலை வேட்கை கவனத்தில் படாமல் சிதறிப்போக வாய்ப்பிருக்கிறது. தலைப்பிற்காக எழுதப்படும் கதைகளில் இத்தகைய கவனச்சிதறல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஒரு சிறுகதை,
முதல் வாக்கியத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது என்று 'வாத்தியார்' சொல்லுவார். இந்த கதை, ஒரு கட்டுரை போல நகர்கிறது என்பதனால், கதாசிரியர் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. என் அனுமானிப்பு தவறாகவும் இருக்கலாம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் நிர்மல்.


2. சூக்கும வழி
^^^^^^^^^^^^

சரளமான எழுத்து. ஒரு வார்த்தையைப் படிக்க ஆரம்பித்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடவேண்டுமா? ஓகையின் இந்த "சூக்கும வழி" குறிப்பினைப் படிக்கலாம். ரசிக்கத்தக்க ஒரு உள்வாங்கல். குழந்தை பிறக்கும் முன்னர், எப்படியெல்லாம் சிந்திக்கக் கூடும் என்ற கற்பனையில் பிறந்த ஒரு படைப்பு.
பிறக்கப்போகும் அந்த குழந்தை, ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று எண்ணம் கொண்டு எட்டிப் பார்க்கிறதாம்! அட..
ஆச்சரியப்பட வைக்கிறார் ஆசிரியர். வாழ்க்கையின் ஆரம்பமே ஒரு விடுதலைதான் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பல ஆக்கங்களைத் தருவதற்கு முன்னோட்டம் என்று கொள்ளலாம்!

நிறை: சரளமான நடை; தெரிந்த விஷயம் ; தெரிந்த விதத்திலேயே சொல்லியிருக்கிறார்

குறை: குறைவான நீளம். இதே விசயத்தை நீட்டி முழக்கி செய்ய முடியும். பிறக்கப்போகும் குழந்தை என்பதையே சொல்லாமல், கற்பனைகளையும் ஒவ்வொரு அசைவுகளின் உணர்ச்சிகளையும் தெரிவிக்க முடியும். ஆனால், அறுவையாகிவிடும் என்பதால் ஆசிரியர் தவிர்த்திருக்கக் கூடும். அல்லது, கூடவே கொஞ்சம் மசாலாக்கள் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு,
பிறக்கப்போகும் குழந்தையின் காதுகள் தாயின் வழி நன்றாக கேட்கும் என்பது அறிவியல் பூர்வமாகக் கூட அறிந்த உண்மை. அபிமன்யூ - சக்கர வ்யூகம் குறித்து பிறப்பதற்கு முன்பே அறிந்தான் என்பது கதை. இதையெல்லாம் போல இன்னமும் கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சூக்கும வழியைக் கண்டுபிடித்திருக்கலாமோ?!

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் ஓகை.

3. விடுதலை? - கவிதை
^^^^^^^^^^^^^^^^^^

கவிதைகளை விமர்சிப்பது சற்றே கடினமானது. இதற்கு காரணம், சின்னஞ்சிறு சொற்களில் கவிஞர்கள் செய்யும் படைப்பு, எத்தனையோ எண்ணங்களைத் தரக்கூடும் என்பதே. இந்த விதத்தில், இந்த கவிதையும் சளைக்காமல் எத்தனையோ என்னச் சிறகுகளை விரிக்கவே செய்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும், திணிக்கப்பட்ட ஏராளமான சமூக கொடுமைகளில் எப்பொழுது விடுதலை என்று ஆசிரியர் கேட்கிறார்.

நிறை: நேரடியாக அறியக்கூடிய பொருள்

குறை: என்னைப் பொருத்த வரையில் கவிதையென்பது ஒன்று, நேரடியாகச் சொல்லவேண்டும், அல்லது பொருளை மறைமுகமாக அறியும் வண்ணம் தூண்ட வேண்டும். அதிலும் முக்கியமாக சொற்ச் சிக்கனம் மிக மிக அவசியம்.


நாம் நிரந்தரச் சிறைவாசிகள்
நமக்கெப்போது விடுதலை?

தேசத்தின் விடுதலை
அன்னியர்களிடமிருந்து
இந்த
தேகத்தின் விடுதலை
வன்முறைகளிடமிருந்து

- மேற்சொன்ன வரிகள் என் பார்வையில் அவசியமில்லாதவை. இந்த வரிகளை நீக்குவதால் கவிதையின் நோக்கத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால் இருப்பதனால், கவிதை படிக்கும் வேகம் குறையும்.

எப்போது கிடைக்கும் விடுதலை?

- அட, இதுதாங்க தலைப்பா இருக்கணும்!

ஆசிரியர் மன்னிக்கவும்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.

4. விடுதலை!
^^^^^^^^^^^^

'வாத்தியார்' சுஜாதா பிரபலப்படுத்திய ஒரு வரி இருவரி கதைகளின் ஒரு முயற்சி. ஒரு வரிக்குள் ஒரு சம்பவம், அல்லது நிகழ்வைச் சொல்ல முடியுமா என்றால், இங்கு ஆசிரியர், ஒரு வரிக்குள் ஒரு வாழ்க்கையையே சொல்லுகிறார்!

ஆம்... காதல் என்பது மட்டுமே என்றால், அது ஒரு சிறு பகுதிதான். ஆனால், நிறைவேறாத காதலனின் நாயகன் வந்து நீரூற்றியதும் விடுதலை பெற்றது என்று சொல்லும் போது, கிழவியின் வாழ்க்கை முழுவதும் நாயகன் நினைவில் என்ற முழுமையைக் காட்டுகிறது.

நிறை: ஒரு வரி மற்றும், உடலில் சிறைப்பட்டிருந்த உயிர் - விடுதலை என்ற தலைப்புக்கேற்ற வார்த்தைகள்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.


5. விடுதலை!
^^^^^^^^^

மீண்டும் ஒரு இருவரிக்கதையுடன் வலைஞன். சொல்லும் விதத்தில் இங்கு ஆசிரியரின் திறமை தெரிகிறது.

நியூஸ். - இன்னிக்குதாங்க விடுதலை. பாவம், இன்னிக்கின்னு பார்த்து செத்துட்டான். - இதான் விசயம். ஆயுள் தண்டனைக்கைதி? சிறைக்கதவு திறக்கப்படும் முன்பே? இதெல்லாம் கதைக்கான இடைச் சொறுகல்.

நிறை: ஒரு செய்தியை சம்பவமாக்கி தலைப்பிற்குத் தகுதியாக்க்கிய திறன்.

குறை: சிறு கதைக்குறிய முழுமையான தாக்கத்தினைத் தராமல் போவது.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.

6. விடுதலை?
^^^^^^^^^^^^

சிறப்பான சிந்தனைகளில் இதுவும் ஒன்று. கல்லிப்பால் குடுத்து அழிக்கப்படும் ஏராளமான பெண்குழந்தைகள் - இன்றைய சமூகத்தின் கொடுமைகளில் ஒன்று.
அடுத்த 20-30 வருடங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பலராலும் அஞ்சப்படுகிறது. இது போன்ற கவிதைகள் வரவேற்கத்தக்கவை.

நிறை: சமூக சிந்தனை. சரளமான எழுத்து.

குறை: கதை கவிதை என்று ஒன்று இருக்கிறதா என்ன? சில நண்பர்கள் எனக்கு யாகூ வில் மின்மடலிட்டால், உடைத்து உடைத்து பதிலை அனுப்பும். இதனை கவிதை என்று நானும் சில முறை படித்து பின்னர் வெறுத்துப் போனதுண்டு. இந்த படைப்பு, கதை கவிதை என்பதை விட, கவிதை என்று சொல்லப்படுவதே கூட சரியானதுதான்.

கடைசி வரிதான் என்னைப் பொறுத்த வரை கவிதை: அதிலும் என்னுடைய சிறு மாற்றம்...

சுதந்திரக்
காற்றைச்
சுவாசிக்கும் அவள் ஆர்வத்தில்
மண்ணைப் போடக் காத்திருந்தது
கள்ளிப் பால் சொட்டு.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன். விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கவிதையைத் திருத்தி எழுதியதற்கு மன்னியுங்கள்.

7. விடுதலை (அ) நவீன சாவித்திரி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

போதை - ஒரு மனிதனை எப்படி அலைக்கழிக்கும், எவ்வளவு தூரம் கீழ்த்தரமாக்கும் என்பது எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை; நேரடியாக அனுபவிக்கும் வரை; அல்லது முகத்தில் உண்மை அறையும் வரை. இது உலகில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி. நம்மைச் சுற்றி எத்தனையோ போதைகள். அறிய அறிய எத்தனையோ வேதனைகள் உருவாகும். இதிலிருந்து இவர்களுக்கு விடுதலை என்று கிடைகும் அல்லது விடுதலையே கிடைக்குமா கிடைக்காதா? இதெல்லாம் சில நேரம் மனதில் தோன்றும் எண்ணங்கள்.

ஒரு மத்தியான நேரத்தில் நாங்கள் கல்லூரியை கட் செய்துவிட்டு அந்த தியேட்டரில் திரையிட்டிருந்த புது படத்தினை பார்க்க ஒதுங்கியிருந்தோம். சீக்கிரமே தியேட்டரில் வந்துவிட்டதால் எங்களை பார்த்த மேனேஜர் உள்ளே வாங்க என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். உள்ளே ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் பத்து பதினைந்து பேர்கள் இருந்திருப்பார்கள். அந்த படத்தில், ரகுவரன் நடித்திருந்தார். போதையின் பிடியில் மாட்டிக்கொண்டு சீரழிந்து, மீண்டும் திருந்தி மீண்டும் மாட்டி என்று போகும். படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. தமிழகமெங்கும் இலவசமாகத் திரையிட்டார்கள் என்று நினைவு.

இந்த நவீன சாவித்திரியைப் படிக்கும் போது அப்படியே அந்த படம் நினைவிற்கு வந்தது.

நிறை: சமூக சிந்தனை. சரளமான, வேகமான எழுத்துக்கள். ஆசிரியருக்கு மிகவும் அருமையாக சம்பவத்தினை விளக்கக் கூடிய திறமை இருக்கிறது. கொஞ்சம் அடிக்கடி முயற்சி செய்தால், திறமையான எழுத்து படியும்.

குறை: நிறுத்தற்குறிகள் சரிவர இடாமை, பத்தி பிரிப்பதில் உள்ள அனுபவமின்மை. கதை என்று இதனைச் சொல்லமுடியாது. அனுபவம் என்ற தலைப்பின் கீழ் வரலாம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் ஏழிசை.

8. விடுதலை
^^^^^^^^^^^^
குமுதம் ஒரு பக்க கதை ரேஞ்ச். கட்டாயம் படிக்கலாம்.

எப்படியாவது ஏதாவது செய்து தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல். அப்புறமென்ன, ஏமாற்றி, வெற்றி பெற்றாகிவிட்டது. ஆனால் மன உளைச்சல்?! இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமே! என்ன வழி, எடு டெலிபோனை, போடு ராங்கால், சொல்லிடு மேட்டரை! - இதுதான் கதை.

சிறில் அலெக்ஸின் எழுத்து நடை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அருமையாக எழுதியிருக்கிறார் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.
படைப்பிலக்கியத்திற்காக நடத்தப்படும் தேன்கூடு போட்டிகளில் இருந்த ஓட்டைகள் குறித்து எழுந்த சிறு சலசலப்பின் நினைவு படிப்பவருக்கு வரும் விதத்தில் எழுதியிப்பது இந்த படைப்பின் அட்ராக்டிங் பேக்டர்.

நிறை: முதல் வரியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. வேகமான எழுத்து. கதா நாயகனின் மன ஓட்டத்தினை விளக்கும் சிறப்பு. விடுதலை என்பது எதிலிருந்து வேண்டுமானாலும் என்ற கருத்து. இதனாலெல்லாம் மன சஞ்சலம் குறையுமா? மன உளைஞ்சல் குறைவதற்கு தகுதியானவர்களிடம் தெரிவிப்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய, இது சரியான வழியா? இத்தகைய சிந்தனைகளை ஏற்படுத்தும் முடிவு.

குறை: எழுத்துப்பிழைகள். சிற் சில இடங்களில் கதைகளுக்கே உரிய நிறுத்தற்குறிகளை ஆசிரியர் கவனிப்பது சிறப்பான பிரசண்டேசனுக்கு உதவி செய்யும்.

வித்தியாசமான ஒரு கோணம்:
At 6:24 AM, கோவி.கண்ணன் [GK] said...

மண்ணிப்பு கேட்பது என்பது வெறும் சடங்கு ஆகிவிட்டது ! சாமியாரிடம் சொன்னால் என்ன ? சைக்கிள் கடைக்காரரிடம் சொன்னால் என்ன ? எல்லாம் ஒன்று தான் என்று சொல்லவருகிறீர்கள் ... என்று சிற்றறிவுக்கு புரிகிறது ! சரிதானே ?

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்.

9. விடுதலை எதற்கு?
^^^^^^^^^^^^^^^^^^

எதற்குப் பெற்றோம் விடுதலையை?! போராடிப் பெற்ற விடுதலை அடித்துக்கொள்வதற்காகவா?

- கேட்கிறார் வசந்த். சின்னஞ்சிறு கதைதான் என்றாலும், பழைய காலத்து வாடை அடித்தாலும், ரசிக்கத்தக்க ஒரு கதை. கட்டாயம படிக்கலாம். நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் பங்கேற்றவர் முன்னின்று, வெள்ளைக்காரனிடமிருந்து இதற்காகவா பெற்றோம் விடுதலை என்ற விதத்தில் கேள்வி கேட்டு காந்திய வழியில் சிந்திப்பதும், ஒரு அருமையான ஆலோசனையை முன் வைக்கும் பஞ்சாயத்தும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நிறை: படைப்பாளியின் சமூக சிந்தனை. சுற்றுப்புறத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள். உதாரணம்: தூறல் நேரத்தில், பெண்கள் கூடைகளைக் கவிழ்த்து உட்கார்ந்திருந்தனர்.

குறை: எழுத்துப்பிழைகள். களம் - எம்.ஜி.ஆர் காலம் என்று இந்த ஜெனரேசனால் கருதப்படும் ஊர் வாய்கால் பிரச்சனைகள், அறிவுரை தீம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வசந்த்.

10. வாசம்

^^^^^^^^^

அட .. ஆச்சரியப்பட வைத்திருக்கிறார், கதாசிரியர் வசந்த். இது நடக்குமா? இது உண்மையா? இந்த லாஜிக்கெல்லாம் தூக்கி அந்தப்பக்கம் வைங்க. படிச்சுப்பாருங்க. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்! ஒரு இனிமையான குடும்பத்தினை கண்முன் படமிட்டு காண்பித்திருக்கிறார் ஆசிரியர்.

"குழந்தைகள் இருவரும் ஆச்சரியமடைந்து, அவளைக் கட்டிக் கொண்டு, ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். 'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்."

வாசம் - மணக்கத்தான் செய்கிறது.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வசந்த்.

(தொடரும்)

9/05/2006

[தேன்கூடு-போட்டி]சின்னதாக ஒரு லிப்ட்

சின்னதாக ஒரு லிப்ட்

"எனக்கு மட்டும் ஒரு சின்ன லிப்ட் கிடைச்சா எங்கியோ போயிடுவேன் சார்...!"

- அந்த தெருமுனை மொட்டைப் பாலத்தில் அவனுடன் பேசியபோது இரவு நேரத்தின் கருமையையும் தாண்டி அந்த கண்களில் ஒரு பளபளப்பு தெரிந்தது. இந்த தேசத்தின் எத்தனையோ இளைஞர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகத்தான் அவன் எனக்குத் தோன்றினான்.

அது ஒரு சராசரியான கிராமம். சென்னையைப் போன்ற எந்த ஒரு பரபரப்பிற்கும் பழக்கமில்லாத ஊர். தெருவில் சகஜமாக அவ்வப்போது மாட்டு வண்டிகளும், எப்பொழுதாவது தூரத்தில் பேருந்தோ அல்லது லாரியோ செல்லும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த ஊர் பள்ளியின் மேற்பார்வைக்காக நான் அங்கு வந்திருந்தேன். பள்ளியின் ஹெட்மாஸ்டர் வீட்டு மாடியிலேயே ஒரு சிறு அறை ஒதுக்கித் தந்திருந்தார்கள்.

**

"இந்த காலத்து பசங்க எல்லாம் இப்படித்தான் சார். வெட்டு குத்துன்னு, இப்ப பாருங்க, இனிமேல என்ன செய்ய முடியும். தேவையா இது?" - வாட்ச்மேன் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பதில் சொல்ல
முடியாமல் வெறித்துத் தான் பார்க்க முடிந்தது எனக்கு.

**

ஸ்ரீதரன் என்ற அந்த 23 வயது இளைஞன் அந்த பள்ளியில் டெம்பரவரியாகத்தான் வேலைக்கு சேர்ந்திருந்தான். பி.காம் படித்துவிட்டு, எம்.காம் கரஸ்பாண்டென்ஸில் படித்து கொண்டிருந்தான். அப்பா அந்த ஊர் போஸ்ட் மேன். அவருக்குத் தெரியாதவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும்!

ஸ்ரீதரன் பேசுவதற்கு இனிமையானவன். ஏராளமான கனவுகளைச் சுமந்தவன்.நிறைய தன்னம்பிக்கை உடையவன். தனது தந்தையின் பாரத்தைக் குறைக்க கிடைத்த வேலைக்குச் செல்வதில் தவறில்லை என்று இந்த பள்ளியில் தற்காலிக வேலையில் இருந்தான். அவனது பேச்சும, சுத்தமும், பண்பும், மரியாதையான பழக்கமும் பார்த்தவுடன் அவனிடம் நிறைய பழக வேண்டுமென்று எனக்குத் தோன்றிவிட்டது. பள்ளியில் வேலை முடிந்து மாலை நேரத்தில் சைக்கிளில் என்னை டபுள்ஸ் வைத்து ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு அருகிலுள்ள மொட்டுப் பாலத்தில் இறங்கி சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்பது எங்களது வழக்கம். அதற்குள் இருட்ட ஆரம்பித்திருக்கும்.

'ஜெயிக்கணும் சார். இந்த உலகத்தையே ஜெய்க்கணும். நம்மால ஏதாச்சும் செய்ய முடியும். நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாரையும் நல்ல நிலைக்கு நாம கொண்டு போற மாதிரி ஒரு நிலைக்கு நான் போகணும் சார். நான்னா நான் மட்டும் இல்லை. நீங்க நான் எல்லாருமே...

இந்த ஊரில பாருங்க சார். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் அடிதடி. பிரச்சனை. ஒரு கடைக்கு மறு கடைக்கும் நடுவுல தகறாரு. அதனால வெட்டு குத்து கொலை. அதில பெருமை வேற. கள்ளன்னா சும்மாவா அப்படின்னு ஒரு
தெனாவெட்டு. இதெல்லாம் ஏன்? படிப்புதான் சார். படிப்பு கம்மியா இருக்கறதுதான் இவங்க எல்லாருமே இப்படி குறுகிய புத்தியில இருக்கக் காரணம். இந்த கிராமத்தையே மாத்தணும் சார்.

இதெல்லாம் சொல்றேன்னு என்னை ஒண்ணும் பெரிசா நினைக்காதீங்க சார். நானும் இதே குருப்தான். நானும் கள்ளந்தான் சார். இதே மாதிரி இப்படி கம்போட அலைஞ்சு எத்தினியோ பேரை நானும் அடிச்சுறுக்கேன். ஆனால், அதெல்லாம் தப்புண்ணு சொல்ல முடியாத அளவுக்கு மனசுக்குள்ள திமிரு கிடந்து ஆடுதுங்கறதும் புரியுது சார். எத்தினியோ நல்ல புத்தகங்கள படிக்கிறப்போ, எவ்வளவு தப்பு பண்றோம்கறது தெரியுறப்போ கொஞ்சம் வேதனையா இருக்கு..'

ஒரு பின் மாலை நேரத்தின் அமைதியில் ஸ்ரீதரன் பேசியதை என்னால் நீண்ட நாள் மறக்க முடியவில்லை.

***

"இப்ப எங்க இருக்காப்ல?"

"தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில சேர்ந்திருக்காங்கலாம். இன்னும் ஒரு வாரத்தில டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கண்ணு சொல்றாங்க!"

***

"என்ன ஸ்ரீதர், உன்னை பத்தி பசங்க ஏதோ சொல்றாங்க. யாரோ பொண்ணை டாவடிக்கிறியாம்?"

ஸ்ரீதர் முகத்தில் சட்டென்று வெட்கம் படிந்தது..

"யார் சார் சொன்னது உங்க கிட்ட?" குரலில் கொஞ்சம் அவசரமும்,இயலாமையும் இருந்தது.

"யாராயிருந்தா என்ன? விசயத்தை சொல்லு.. "

"ஆமா சார். அக்கிரகாரத்துலேர்ந்து வருது சார். நம்ம ஸ்கூலதான் டீச்சர் டிரைனிங் படிக்குது."

"அட.. என்ன ஐய்யர் ஊட்டு பொண்ணா? ஒத்து வருமா?"

"சாதியில என்ன சார் இருக்கு? எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா எங்க ஐயன் ஒத்துப்பாரான்னுதான் கொஞ்சம் பயமா இருக்கு.."

அவன் முகத்தில் கவலையும், கலக்கமும் தெரிந்தது.

"அதெல்லாம் சரியாயிடும் ஸ்ரீதர். உலகத்தில எத்தினியோ பேர் இதெல்லாம் செய்யத்தான் செய்யராங்க."

"ஆமா சார். ஆனாலும் ரெண்டுபக்கமும் பிரச்சனை வரத்தான் சார் செய்யும். கீதாவுக்கு அப்பா இல்ல. இருந்தாலும், அவங்க வீட்லயும் ஆர்தடாக்ஸ் பேமிலிதான். நான் மட்டும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு எப்படியாவது
வந்துட்டேன்னா, தைரியமா போயி பேசிடுவேன். ஸ்கூலியே பர்மனெண்டாயிட்டா கூட இப்போதைக்கு போதும்."

இந்த பிள்ளை, மனசுபோல சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. இறைவா.. - என் மனசுல் இறைஞ்சுதல் தோன்றியது.

***

"ஏதோ பொம்பள பிரச்சனை போல இருக்கு சார். இவன் இறங்கி பேசறப்போ என்னமோ பேசிகிட்டானுங்க. இதெல்லாம் தேவையா சார் இவனுக்கு?"

"அடி பலம் போல.. பெரிய ப்ரச்சனையாயிடுச்சு. இவனுக்கு எதுக்குங்க தேவையில்லாத வேலை. எவனோ எவனையோ வெட்டப்போனா ஒதுங்கிட்டு போக வேண்டியதுதான். மத்தியஸ்தம் பண்றானாம். லூஸுப் பய. இப்ப யாருக்கு
ப்ரச்சனை? தேவையா இது?"

***

சென்னைக்கு வந்து நீண்ட நாட்களுக்கு ஸ்ரீதரனும் அவன் நினைவுகளும் மனதில் இருந்தது. சொந்த ஊரில் ஏற்பட்ட ஏதோ ஒரு தகறாரில் கை வெட்டுப்பட்டு தஞ்சாவூர் ஆஸுபத்திரியிலிருந்து அவன் திரும்ப வருவதற்கு முன்னதாகவே
என் வேலை முடிந்து சென்னை திரும்பி விட்டிருந்தேன். வலது கை இழந்த அவனுக்கு, வாழ்க்கையில் முன்னேற்றம் எந்த விதத்தில் வரக்கூடும்? அவன் நினைத்த வண்ணம், இனி பள்ளிக்கூட வேலையாவது பர்மனெண்ட் ஆகுமா?

இதெல்லாம் என் மனதில் சில காலம் அழைக்கழிந்தது; பின்னர் மறந்துவிட்டிருந்தேன்.

***

இப்பொழுது எனக்கு வேலை இல்லை. என்னுடைய வயசுக்கு இனி கவர்மெண்ட் உத்யோகம் கிடைக்காது. மனைவியும் உயிருடன் இல்லை. மகன் அமெரிக்காவில் குடும்பத்தோடு. வீட்டில் வெட்டியாக இருக்கப் பிடிக்காமல், தி.நகரில் இருந்த இந்த டுடோரியல் கல்லூரியில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.

"சார், நீங்களா? வணக்கம் சார். என்னை ஞாபகம் இருக்குதா? ஸ்ரீதர் சார். _______ ஊரு சார். நீங்க கூட இன்ஸ்பெக்சனுக்கு வந்திருந்தீங்களே! "

ரிசப்சனில் இருந்தவரைப் பார்த்து, "கீதா மேடத்தை கூட்டிகிட்டு வாங்க" ..

"நான் சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன் சார். எங்க ஊரை எதிர்த்து, கீதாவை கல்யாணம் பண்ணிகிட்டு, சென்னைக்க் வந்து டுடோரியல் காலேஞ் வச்சு ஒரு மாதிரி சாதிச்சுட்டேன். சின்னதா ஒரு லிப்ட் கிடைச்சா போதும்னு, அடிக்கடி
சொல்வேன்ல சார். எனக்கு லிப்டே 'கீதா' தான் சார். என்ன ஒண்ணு, நான் நினைச்ச மாதிரி எங்க ஊரைத் தான் திருத்த முடியல. ஆனாலும் நான் நினைச்ச மாதிரி எல்லாரையும் படிக்க வைக்கிற தொழிலை ஆத்மார்த்தமா செஞ்சுகிட்டிருக்கிறேன்."

ஹாங்கரில் மாட்டிய சட்டை போல தொங்கிக்கொண்டிருக்கும் அவனது சட்டையில் வலது கரத்தின் பக்கம், காற்றில் ஊசலாடிய வண்ணம் ஏதோ ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருந்தது.

(முற்றும்)

************
தூண்டுதல்கள்:
1) பண்புடனும், மரியாதையுடனும் இருப்பவன் உலகில் எதையும் சாதித்துவிடுவான். - இன்று படிக்க நேர்ந்த வாக்கியம்.
2) ஆசிரியர் தினம்.
3) தேன்கூடு போட்டி.

9/04/2006

கொஞ்சம் தூக்கி விடலாம்!

"நம்ம சாதிக்காரப் பையந்தான். அதான் கொஞ்சம் தூக்கிவிடலாம்னு பார்க்கிறேன். என்ன சொல்றீங்க"
"எல்லாஞ்சரிதான் ஆனா ஒழுங்கா இருப்பானா?"
"அதெல்லாம் நல்ல பையங்க. இவன்.. இவங்கூட இருக்கிற பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஊரில நிறைய செஞ்சுருக்கானுவ. வருசா வருசம் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவில முன்னாடி நின்னு எல்லா காரியமும் இவனுகத் தான் பாப்பானுவ.."
"ம்.. சரி வரச்சொல்லுங்க. பயோடேட்டா முக்கியம். நான் முதல்ல பேசிப்பார்க்கிறேன்"
"ரொம்ப நன்றிங்க, நாளைக்கே வரச்சொல்றேன்."

- இது ஒரு சிறு உரையாடல். ஆனால் இந்த எண்ணம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. ஜாதி என்பது ஒரு உதாரணம் தான். இந்த தூக்கிவிடலுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அது சொந்த ஊர் என்பதாகவும் இருக்கலாம். தமிழ்நாடு என்பதாகவும் இருக்கலாம். இந்தியா என்பதாகவும் இருக்கலாம். உங்கள் கூட கிரிக்கெட் விளையாடியவர் என்பதாகக்கூட இருக்க முடியும்! என்னவாக இருந்தாலும், தனக்குத் தெரிந்தவரை தூக்கிவிட வேண்டும் என்ற நினைப்பில்லாத மனிதர்கள் மிகக் குறைவு.

சத்தியமாகத் தவறில்லை. இது மனித இயல்பு என்றே சொல்வேன். நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் இது போன்ற செயல்கள் மூலம் தூக்கிவிடத்தான் வேண்டும். ஆனால், இதையும் தாண்டிய ஒரு நிலை வேண்டும். அந்த நிலைக்கு கொஞ்சமே கொஞ்சம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அதைச் செய்ய முடியுமா?

--

அடுத்தவருக்கு உதவ ஒரு மனம் வேண்டும். கர்ணன் ஒரு கைக்கு தெரியாமல் மறு கை வழி தானம் செய்பவன் என்று சொல்வார்கள். ஏன் தெரியாமல் செய்ய வேண்டும்? தெரிந்து செய்வதில் தவறென்ன? மனிதனின் மிகப் பெரிய திமிர், கர்வம்- தான். இந்த கர்வம் வராமல் இருப்பதற்காகத்தான் இப்படி ஒரு செயல். ஒரு கையால் செய்யும் உதவி அடுத்த கைக்கு தெரிவது கூட தவறு என்பதைத்தான் இது சொல்கிறது.

உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.. எப்படி முடியும்? முடிவது சுலபம்தானா? இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்விகள்.

-


நீங்கள் ஏராளமான நண்பர்கள் உடையவரா? ஏன் ஏதேனும் செய்யக்கூடாது? ரொம்ப ஒண்ணும் இல்லை.

உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு இடங்களில் சின்ன அளவில் ஏதேனும் உதவி செய்ய இயலுமா என்று யோசியுங்கள்.

உதா: உங்களூர் பள்ளிக்கு ட்யூப் லைட் போடத்தேவையிருக்கலாம். (ட்யூப் லைட் வெளிச்சம் தெரியாத அளவுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாமே ப்ளீஸ்!)

உங்களூரில் அல்லது அருகிலுள்ள முதியோர் இல்லத்திற்கோ அல்லது அனாதை ஆசிரமத்திற்கோ உதவி செய்ய முயற்சிக்கலாம்.

ஒரு பொது காரியத்திற்கு - அது கொசு உற்பத்தி மையமான சாக்கடையை சுத்திகரிப்பதாகக் கூட இருக்கலாம் - நீங்கள் இறங்கிச் செய்ய வேண்டியதில்லை, செய்யக்கூடியவர்களை கண்டுபிடித்து பணம் கொடுத்து செய்யச் சொல்லலாமே!

உங்களுக்கு அவசியமென்றிருந்தால், இதெல்லாம் ஒரு போட்டோ எடுத்து, உங்கள் ஊர் நிருபரிடம் சொல்லி ஒரு வரி நாளிதழில் எழுதச் சொல்லுங்கள். இதிலும் சிறு உபயோகம் இருக்கிறது. ஆர்வமுள்ள பலர் உங்களைத் தொடர்பு கொள்ள இது உதவலாம்.

--

நம்மில் பலருக்கு ஏதேனும் பெரிய விதத்தில் பிரச்சனை ஏற்படும் போதுதான் உதவிக்குழுக்கள் பற்றி தெரியவரும். குஜராத், ஒரிசா, சுனாமி, காஷ்மீர் என்று இயற்கையோ அல்லது சீற்றத்தின் விளாசலோ தாக்கும் போது மட்டும்தான் தேசத்தின் வேதனை தெரியும்.

குறைந்த பட்சம், இந்த நேரத்திலாவது உதவி செய்வதற்கு தயங்கவே தயங்காதீர்கள்.

--

போன போட்டியில் ஒரு பதிவரால் எழுதப்பட்ட ஆக்கம் : தாயுமான தந்தையுமான திரு. உதவும் கரங்கள் 'திவாகர்' பற்றி தெரிந்து கொள்ள : http://www.udavumkarangal.org

சிவானந்த குருகுலம் - நல்ல பல காரியங்களை சிறப்பான முறையில் செய்துவரும் ஒரிடம் - இதனைப் பற்றி தெரிந்து கொள்ள :http://www.buildhope.org/

--
இணைய உபயோகம் என்று வந்துவிட்ட பிறகு கிரடிட் கார்ட் இல்லாமல் முடியுமா?

கீழ்கண்ட இரண்டு தளங்களும் கிரடிட் கார்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

https://www.cry.org/donor/crydonation.asp
http://www.giveindia.org

அன்பளிப்புப் பொருட்களுக்கு...

www.craftsbridge.com,
http://www.akanksha.org/

சில தளங்கள்:

http://www.ravixp.net/IVA/
AimsIndia.net

இணையத்தில் சிறு சோதனை செய்து உருவாக்கிய பகுதிதான் இது. நன்றிகள் அனைத்து கட்டுரைகளுக்கும்:

http://www.desikan.com/blogcms/?item=139
http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html

---

இதெல்லாம் விடச் சுலபமான ஒரு வழி இருக்கிறது. உங்களைச் சுற்றி பலரும் ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கவனித்து வாருங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். தயங்காமல் அவரிடம் பேசி, உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது என்பதனைத் தெரியப்படுத்துங்கள். அவசரமே இல்லை. கொஞ்சமே கொஞ்சம் ஒரு ஓரத்தில் இதெல்லாம் செய்யலாம் என்று தோன்றினாலே போதும்! உங்களுக்குள் எத்தனையோ சிந்தனைகள் ஊற்றெடுக்கும்!! அது யாரேனும் ஒருவருக்கேனும் வாழ்வில் ஏற்றம் பெற உதவி செய்வதாக அமையும்!

-
உபயம் : தேன்கூடு போட்டி.

8/22/2006

மாசும் மகிழ்ச்சியும்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்வார்கள். குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டும் இல்லை நம்மையே நாம் அழித்துக்கொள்வது போலத்தான் ஆகும். இதில் குற்றம் என்று மொட்டையாகச் சொல்லாமல், பிறரிடம் குற்றம் காண்பிப்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சில உதாரணங்களுடன் இதைப் பார்க்கலாம். ஏனென்றால்.. இந்த கருத்து சொல்லும் வார்த்தைகள் படித்த உடனேயே புரிந்துவிடுவதாகத் தோன்றுவதுதான்! இப்படி படித்த உடனே புரிந்துவிடுவதாகத் தோன்றும் கருத்துகள் மனதில் பட்டு சிதறி விடுகின்றனவே தவிர, பதிந்து விடுவதில்லை. பதிந்துவிட்ட கருத்துக்கள் பல நேரங்களில் குப்பைகள்!

மெகாசீரியல்கள் - சன் டி.வி யை தொடர்ந்து ஒரு மணி நேரம் பார்த்தால் போதும் - என்றால் எவ்வளவு அடிக்ஷன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மெகா சீரியல்களில் பார்த்தீர்களானால், மாமியார் எப்படி பாவமாக இருக்கும் (அல்லது நடிக்கும்) அந்த பிஞ்சு பாப்பா மருமகளை கரித்துக் கொட்டுகிறார்கள் என்று சற்றே கவனித்துப் பாருங்கள். செருப்பை எடுத்து அடிக்கலாமா என்று பார்க்கிறவர்கள் டென்ஷனை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே வசனங்கள் எழுதுவார்கள்.

இது போல கணவன்களும்/மனைவிகளும் கூட இருப்பதுண்டு. ஒருவரை பிடிக்க வில்லை என்றால், ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது ஒதுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், கண்ணெதிரிலேயே வைத்துக்கொண்டு கழுத்தறுப்பு செய்வது என்பது சர்வ நிச்சயம் தவறு. தெரிந்தே தவறு செய்யும் இவர்கள் தன்னையே மாசுபடுத்திக்கொள்ளூம் துர்பாக்கியசாலிகள். இதில் யாரும் விலக்கல்ல..

மனசு என்பது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. இதுதான் 100ற்கு 90 சதவீத மனிதர்களின் நிலை. வயதும் இந்த முதிர்ச்சியைத் தந்துவிடுவதில்லை. அடுத்தவர் சொல்வதைக் கேட்டு தன்னை மாற்றிக்கொள்வதென்பது மட்டுமல்ல.. உள்ள உணர்ச்சிகளுக்கு முழு ஒப்படைப்பினைத் தந்துவிட்டு வருத்தப்படுவதிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை. ஏன்? இதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனம். மனதை தெளிவாக வைத்துக்கொள்வதில் இருக்கும் சுகத்தினை மறந்துவிடும் சோகம்.

உள்ளத்தினில் எப்பொழுதும் உற்சாகமும், மகிழ்ச்சியும், தைரியமும் பொங்குமானால் இதைவிடச் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து இல்லை! இது உடலுக்கான நோய்க்கு மட்டுமல்ல உள்ளத்திற்கான நோய்க்கும் கூட!!

பிறரிடம் குற்றம் காண்பவன் தனது மனதையே மாசுப்படுத்திக்கொள்பவன் ஆவான்..!

8/19/2006

பணச்சுழற்சி

உலகத்தில் மனிதனின் மனதில் ஆழமாக உறுத்தக்கூடிய ஒன்று என்று ஒன்று இருந்தால்.. தன்னைத்தானே அவமானத்தில் அழுந்திக்கொள்ளும் மன வியாதி என்று ஒன்று இருந்தால் அது - வெற்று பர்ஸ் மட்டும்தான்.

பணம் இல்லாத அந்த நேரத்தில்தான் இருந்த பணத்தினை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பதும், இப்பொழுது பணம் கிடைத்தால் என்னென்ன செய்யலாம் என்ற எண்ண ஓட்டங்களும் மனிதனை அலைக்கழிக்கின்றன.

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதுண்டு. அது என்ன பத்து? எண்ணிக்கையா சொல்கிறார்கள்? ஒன்றுக்கு பத்தாக எதையும் செய்யத் தூண்டுவது பணம் மட்டும்தான் என்பதென்னவோ சரிதான்!

இல்லானை இல்லாளும் வேண்டாள் - இது குறள். கையில் காசில்லாமல் எந்த ஒரு கணவனாவது மனைவியை சந்தோசப்படுத்த முடியும் என்றாலோ அல்லது மனைவி சந்தோசப்படுகிறாள் என்றாலோ அந்த சந்தோசத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தான் செய்கிறது மனது. பணம் செய்யும் பாடுகள் தான் என்னே!

பணமில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால் கடன் மட்டும் இருந்துவிட்டால்....! அவ்வளவுதான்!!

இந்த வேதனையை அனுபவிக்காத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதைப் பேசுவதற்குக் கூட பலர் தயங்குவதுண்டு. கடன் மேல் கடன் வாங்கியாவது தன் வாழ்க்கை உயர் நிலையில் உவப்பாக இருப்பதாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்களும் உண்டு. இவர்கள் அனைவரையும் வாழ்க்கை என்றேனும் தட்டிப் பார்க்காமல் விடுவதில்லை. ஏமாற்றத்தின் உச்ச கட்டத்தினை அனுபவிக்க வைக்காமல் தவிர்ப்பதில்லை.

கையில் பணம் இருக்கும் போது தெரியாத, சேமிப்பின் உண்மையான மதிப்பும் உதவியும் நமக்குத் தெரிய வரும் போது காலம் தாண்டியிருக்கும். மீண்டும் பணம் வரும்போது, பெத்தடின் ஊசி போல இந்த சேமிக்கும் எண்ணமும் அவமானத்தினையும் மனசு அடிமனசில் போட்டு புதைத்துவிடுகிறது. பணத்தினை வைத்துக் கிறங்க ஆசைப்படுகிறது.

இன்று படித்தது:

பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.

8/18/2006

சுபாஷ் ஒரு நினைவு

சுதந்திரப் போராளிகளுகளில் சிறந்த போராளி - இது மகாத்மா காந்தி நேதாஜி பற்றி கூறியது. தன்னை இந்திய தேசிய பார்ட்டியில் இணைத்துக்கொள்வதற்கு போது, சுபாஷ் சந்திர போஸ் திறமையான துடிப்பான இளைஞன். காந்தியின் அஹிம்சா வாதத்தில் மிகவும் வெறுத்துப் போன இவர், ஆசாத் ஹிந்து பாவ் ல் இணைந்து பிரிட்டிஷ் ஆர்மியை இரண்டாம் உலக்ப்போரில் தோற்கடிக்க முடிவு எடுத்தார். இந்த முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், சுதந்திரப் போராட்டத்தின் தவர்க்க முடியாத ஒரு இடத்தினைப் பெற்றார் சுபாஷ் சந்திர போஸ்.
'ஜெய் ஹிந்த்' - இதுதான் இவரது முழக்கம். இந்திய தேசத்தின் சுதந்திர உணர்ச்சியை மிகப் பெரிய அளவிற்கு தூண்டிவிட்டவர் இவர். பெங்காலி குடும்பத்தில் ஜனவரி 23, 1897ம் ஆண்டு கட்டாக், ஒரிச்சாவில் பிறந்த சுபாஷ் பதினாறு ஆண்டுகள் பிறந்த ஊரிலேயே வாழ்ந்தார்.
இவரது தந்தை ஜான்கிநாஹ்ட் போஸ் லாயராகப் பணி புரிந்தவர். பழமைவாதி. பப்ளிக் பிராசிக்யூட்டராகவும், பின்னர் பெங்கால் லெஜிஸ்லேடிவ் கவுண்சிலிலும் பங்கேற்றவர்.
எட்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள் - சுபாஷின் குடும்பம் பெரியதுதான் ஆனாலும், கட்டுப்பாடாக வாழ்ந்து வந்தனர். சுபாஷ் படிப்பதிலும், கடவுள் தேடலிலும், தனிமனித ஒழுக்கத்திலும் ஈடுபாடுடையவர். சமூக சேவைகள் செய்து வந்தார். விவேகானந்தரின் எழுத்துகளைப் படித்த பிறகு, ஆதாயமில்லாத சேவையே இவரது லட்சியமாயிற்று!

சுபாஷ் சந்திரபோஸ், கல்லூரியிலிருந்து துரத்தப்பட்டதே இவரது வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். தனது மகனின் திறமையை அறிந்த சுபாஷின் தந்தை, சுபாஸை இந்திய சிவில் சர்வீஸி இணைத்து பெரிய ஆளாக்க ஆசைப்பட்டார். சுபாஷ இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்கு அனுப்பப்பட்டார். 1929 ம் ஆணடு நடைபெற்ற சிவில் சர்வீஸ் ஒபன் எக்ஸாமில் சுபாஷ நான்காவது இடத்தில் வந்தார். படிப்பில் மிகச் சுட்டியாக இருந்தாலும், சுபாஷ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார். காங்கிரஸ் பார்ட்டியில் இணைந்து இளைஞர் காங்கிரஸில் ஆர்வமுடன் ஈடுபாட்டார். இந்திய சிவில் சர்வீஸிலி இருந்து 1921ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

இந்தியா திரும்பியவுடன் காந்தியை சந்திக்கச் சென்றார். இவரது ஐடியாக்கள், காந்தியின் அகிம்சா தத்துவத்துடன் ஒத்துவர வில்லை.கல்கத்தா திரும்பி, சி.ஆ.தாஸ் என்ற பெங்காலி சுந்திரப்போராட்ட வீரருடன் இணைத்தார். 1921ம் ஆண்டு பிரிண்ஸ் வேல்ஸின் இந்தியப் பிரயாணம் குறித்த ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
இதனால் சிறை சென்றார். 1924 ம் ஆண்டு புதிதாக உறுவாக்கப்பட்ட கல்கத்தா கார்பரேசனின் சி.இ.ஓ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே வருடன், தீவிரவாதி என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். முதலில் அலிபூர் ஜெயிலிலும், பின்னர் மண்டாலே (பர்மா) ஜெயிலிலும் அவர் சிறை வைக்கப்பார். 1925ல் இவரது தலைவர் சி.ஆர்.தாஸ் மரணம் சுபாஷை மிகவும் பாதித்தது.

1926-ல் பெங்கால் அசம்பிளியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1027ல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பர்மா சிறை இவரது மனவுறுதியை அதிகப்படுத்தியிருந்தது.
1927-ல் போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரும் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரியாக நியமிக்கப்பட்டனர். 1930ல் சுபாஷ் மீண்டும் அரஸ்ட் செய்யப்பட்டார். எட்டு மாத சிறை வாசத்திற்குப் பிறகு, கல்கத்தாவின் மேயரானார்.
1932ல் வியண்ணாவில் மருத்துவ காரணங்களுக்காக சென்றிருந்த போது, விதந்தாஸ் பட்டேலில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

பிர்ட்டனுக்கு எதிராக அனைத்து சக்திகளை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தினை அவர்கள் உணர்ந்தனர். ஒத்துழையாமை தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் ஒத்துழையாமை ஒரு போராட்டமாக அனைத்து பக்கங்களிலிருந்தும் வெடிக்க வேண்டும்". 1033ல் சுபாஷிடம் ஏராளமான பணம் மற்றும் சுந்திரப் போராட்டத்தின் எண்ணங்களையும் கொடுத்துவிட்டு, வித்தான் பட்டேல் மரணமடைந்தார்.

====
நேற்று சுபாஷ் சந்திரபோஸின் நினைவுநாள் என்று எங்கோ படித்தேன். இணையத்திலிருந்த ஒரு கட்டுரையினை சற்றே தமிழ்ப்படுத்தி பலகையில் கிறுக்கி வைக்கத்தோன்றியது. அதுதான் மேலே இருப்பது.

நன்றி: http://www.geocities.com/Athens/Atlantis/6304/nscb.html

8/16/2006

தவறுகள் - அவமானங்கள்

தவறுகள் மனித இயல்பு.. உண்மைதான். ஆனாலும் இந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் எத்துணை மாறுதல்கள். சிலருக்கு தவறென்று படுவது, பல நேரங்களில் எதிராளிக்கு தவறாகத் தோன்றுவதில்லை. இந்த நிலையில், தான் விரும்பிய பெண்ணுக்கு மட்டும்தான் அத்தனையும் அழகு என்பது போல தனக்கு தவறென்று தோன்றுகிற ஒரே காரணத்திற்காக.. வாழ்க்கை முழுவதும் வருத்தப்படும் வித்ததில் அடுத்தவரை அவமானப்படுத்துபவர்கள் அதிகம்.

சிறு சிறு மின்னல்களாக உலகில் ஆங்காங்கே கிடைக்கும் பல சுகங்களையும் இப்படிப்பட்டவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். இதை விட கொடுமை இத்தகையவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் செய்த தவறை சொல்வதே இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் குழந்தைகளும் பெற்றோர்களும் தான். அப்பா அல்லது அம்மா அடிப்பார் என்று தெரிந்த பின்னரும் தான் செய்கின்ற தப்பைச் எத்தனைப் பிள்ளைகளால் தயங்காமல் சொல்ல முடியும்? முடிந்த வரை மறைக்கவே விரும்பும். இந்த சிறுவயது பழக்கம் காலத்திற்கும் தொடராமல் விடாது!

செய்த தவறை சொல்லத் தயங்குவது என்பதே தனி சப்ஜெக்ட். எதற்காகச் சொல்ல வேண்டும்? எவ்வள்வு தூரம் இதில் உதவி இருக்கிறது? இப்படியெல்லாம் பல வித கணிப்பிற்குப் பிறகே.. இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. செய்வது தவறாகவே இருந்தாலும், அல்லது செய்தது தவறாகவே இருந்தாலும், அதனைத் தவறு என்று ஒப்புக்கொள்வதே உலக மகாத் தவறு என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க..

இன்று படித்தது:

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை!

4/29/2006

கற்றது கை மண் அளவு


பெரும்பாலும் க்ளிஷேயாக உபயோகப்படுத்தப்படும் பொன்மொழி இது. கற்றது கை மண் அளவு! கல்லாதது உலகலவு! ஆனால் உண்மை.

உங்களுக்கு இப்படித் தோன்றியிருக்கிறதா: நீங்கள் பார்க்கும் நபர், அல்லது உங்கள் அருகிலிருக்கும் உங்கள் தலைவர், அல்லது திரையில் பார்க்கும் மெத்தப் படித்த நபர்கள் இவர்களெல்லாம், உங்களினும் மேலாகப் படித்தவர்கள் என்று எப்பொழுதாவது தோன்றியிருக்கிறதா?! அப்படித் தோன்றியிருக்கும் பட்சத்தில், கற்றது கை மண் அளவு என்ற எண்ணம் கொஞ்சமாவது உங்களிடம் இருக்கும் என்று கட்டாயம் சொல்லலாம். இந்த விவேகம் வெற்றி பெற ஆசைப்படும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஏன்? பணிவு இருந்தால்தான், இன்னமும் நிறைய செய்ய வேண்டும் என்று தோன்றும், அதுவே ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்கு ஆதாரம்.

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பது விவேகம்.

விவேகமும் நற்குணமும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள்.

2/11/2006

நீர்க்குமிழிகள்

வார்த்தைகள் வெறும் நீர்க்குமிழிகள், செயல்களே தங்கத் துளிகள்.

படிக்கும் போதே.. உள்ளுக்குள் தோன்றும் வார்த்தைக் குமிழிகள் உடைந்து போவது போலத் தோன்றவில்லையா என்ன?! ஆனால் என்ன.. அனுபவித்துப்படிக்க வேண்டும்...!

நம்மில் பலர் வார்த்தைகளை அதிகம் இறைத்துவிட்டு, அவசரப்பட்டு விட்டுவிட்டு திண்டாடுபவர்கள். இந்த திண்டாட்டம், எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். சில தினங்களுக்குப்பிறகு, இந்த திண்டாட்டம், வருத்தப்படுகின்ற நிலைக்கு வந்த பிறகாவது சிலர் திருந்துவதுண்டு.

மனிதர்களாயிற்றே, திரும்பவும் திரும்பவும் தவறு செய்வது இயல்பாயிற்றே. அறிந்ததை மறந்துவிட்டு, திரும்பவும், தவறு செய்வார்கள். வார்த்தைகளை இறைப்பார்கள். இந்த குணத்திலிருந்து வெளிவரவேண்டிய அவசியம் வெற்றிபெற விரும்பும் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

மெளனம்... பேச்சுக்கள் அற்ற அந்த மவுன நிலையை ஆன்மீகவாதிகள் விரும்புவது போலவே நானும் விரும்புகின்றேன். செயல்களாக என் வாழ்க்கை எப்பொழுதும் அமைந்துவிடக்கூடாதா என்ற எண்ணம் அவ்வப்போது வராமல் இருப்பதில்லை!

மொட்டைமாடி தனிமையில், இரவு நேரத்தின் குளுமையில் மல்லாந்து படுத்துக் கொண்டு வான் பார்க்கும் நேரம் எங்கிருந்துதான் இத்தனை மன ஒருமைப்பாடும் வெற்றிக்கு தேடும் மனநிலையும் வருமோ தெரியவில்லை, காலையில் எழுந்து தினசரி வேலைகள் செய்ய ஆரம்பித்தவுடன் அது காணாமல்தான் போய்விடுகிறது. ஆனாலும் எண்ணங்களே வாழ்க்கையாக உருமாறுகின்றன என்று பலர் எழுதியிருக்கிறார்கள். என்றேனும் இந்த எண்ணங்களும் உருமாறும் என்ற நம்பிக்கை, தினப்படித் தடைகளையும் மீறி, தடைபோடும் உறவுகளையும் மீறி, முடிவுக்கு வந்துவிட்ட அலட்சியப்பார்வை வீசும் நெருக்கமானவர்களையும் மீறி தள்ளி நின்று ஆச்சரியப்பட வைக்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அதற்கு இன்னும் எத்தனையோ காலம் செல்ல வேண்டும்.
ஒரு வேளை வாழ்க்கை முழுமையுமே ஆகலாம்!

--
மேலே எழுதிய சிந்தனை 'முகரம்' தினத்தன்று எழுதி வைத்தது. இன்று காலையில் வேறொரு பொன்மொழி கண்ணில் பட்டது. அது....

தெரிந்ததை சொல்லிவிடாதே.. முடிந்ததை செய்துவிடாதே!

வேடிக்கைதான். நேற்று எழுந்த சிந்தனைக்கு முற்றிலும் மாற்றல்லவா இது?! ஒருவேளை கவனமாக இருக்கச்சொல்கிறார்களோ?! கொஞ்சம் விகர்ப்பமாக சிந்தித்தால் இந்த கருத்து, எல்லாரிடமும் அவர்களையும் அறியாமல் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. படிப்பவர்களாகட்டும், வேலையில் இருப்பவர்களாகட்டும், எல்லோரிடமும் இப்படி ஒரு எண்ணம் கண்டிருக்கிறேன். தெரிந்ததை சொன்னால் அவர்கள் மதிப்பு போய்விடும் என்று எண்ணுவார்கள். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு சிலாக்கியத்தக்க குணமில்லை. ஒருவர் சொல்லாவிட்டால், இன்னொருவர்! அவருமில்லாவிட்டால் வேறொருவர். இதில் எங்கிருந்து வந்தது சொல்லாமல் இருந்தால் மதிப்பு என்பது. என்ன முன்னே பின்னே கொஞ்ச காலம் ஆகும் ஒருவர் தெரிந்துகொள்ளுவதற்கு. அவ்வளவுதானே!?

அதிலும், முடிந்ததை செய்துவிடாதே...! ஏன்? எனக்கென்னமோ இந்த வரிகளில் உடன்பாடில்லை.

2/08/2006

பிழைப்பைத் தேடி

கெட்டிக்காரன் பிழைப்பதற்காக எட்டு ஊருக்குச் செல்வான்.

நிச்சயம் கவனிக்க வேண்டிய கருத்துதான். ஒரு சிறு புன்னகையை வரவைக்கும், இதை படிப்பவர்கள் வெளிஊருக்கோ அல்லது முக்கியமாக வெளி நாட்டிற்கோ சென்று வேலைசெய்பவர்களாக இருந்தால்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிய தமிழ் பரம்பரை, இது குறித்து பல காலங்களுக்கு முன்னரே தெளிவாகத்தான் இருந்திருக்கிறது. பட்டினத்தாரின் கதையாகட்டும், அல்லது காரைக்கால் அம்மையார் கதையாகட்டும், அல்லது முந்தைய சரித்திரமாகட்டும், எட்டு திக்கும் சென்று திரைகடலோடி திரவியம் தேடுபவர்கள் கெட்டிக்காரர்களாகத்தான் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கும், ஒரு சிறுவன் வளரும் பருவத்திலேயே அவனை வெளிநாடு அனுப்பி வைக்கும் எண்ணத்துடன் வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்திய இளைஞன் தவறாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு அர்த்தம், தாய்நாட்டின் மீது பற்று இல்லாமல் என்பது அல்ல. இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை எல்லோருக்குமே அதிகம், அது மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் இளைஞர் மற்றும் இளைஞியர் பார்வையும் விசாலமாகிறது. இந்த விசாலமான பார்வை நாளைய இந்தியாவிற்கு கட்டாயம் உதவி செய்யும்.

2/07/2006

தடைகள் உடைக்கப்படட்டும்

பல தடைகளை உடைப்பவனே வாழ்க்கையில் முன்னேறுவான்.

தடைகள்... உடைப்பது என்பது ஒரு சவால். எந்த தடையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படிப்பட்ட தடையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த தடைகளைத் தாண்டித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு மனநிலைக்கு ஒரு மனிதன் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். இந்த கருத்தில், ஒரு தடையோடு நின்று விடச்சொல்லவில்லை. பல தடைகளை உடைப்பவனே வாழ்க்கையில் முன்னேறுவான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பல தடைகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதும் அப்படி தடைகள் வரும் என்பதும் தடைகள் இல்லாத வெற்றி என்பது இல்லை என்பதும் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

இங்கே மிகவும் முக்கியமான வார்த்தையாக எனக்குத் தோன்றுவது 'உடைப்பது'! சாதாரணமாக சொல்பவர்களும், பேசுபவர்களும், தாண்டுவது என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்கள். ஆனால், உடைப்பது என்ற வார்த்தையை உள்வாங்கிப்பார்த்தால், அந்த சிந்தனையே தடைகளை தெரிக்கச் செய்ய வேண்டும் என்ற அழுத்தமான எண்ணத்தினை உருவாக்கும். அதுதான் தமிழ் வார்த்தைகளின் பலம்!

- எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது, கண்ணெதிரே பிரச்சனைகளை கற்பனை செய்துகொண்டு அந்த பிரச்சனைகளை உடைத்து எரிவது போல கற்பனை செய்துபார்த்தால், அந்த எண்ணமே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடும்.

2/06/2006

உதவாக்கரை

மகனை ஒன்றுக்கும் உதவாதவனாக வளர்த்தால் திருடனாவான்.

- இன்று படித்த கருத்து இது. ம்... என்ன அர்த்தம் இதற்கு? வளர்ப்பது என்பது நம் கையில் இருப்பது போலத்தோன்றினாலும் வளர்வது என்பது சுற்றுப்புறம் மற்றும் நண்பர்கள் என்று முற்றிலும் அவர்கள் கையிலேயே தானே இருக்கிறது!

- நண்பர் ஒருவரின் பையனுக்கு நல்ல படிப்பும் வாழ்க்கைக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார், ஆனாலும் அவன் திருடனானான். ஏன்? இது வளர்ப்பில் மட்டுமுள்ள குறைபாடல்ல.. அதனையும் தாண்டி ஏதோ ஒன்றிருக்கிறது.

- இந்த ஒரு கருத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமாக குழந்தைகள் இருப்பவர்களுக்கு சுருக்கென்று தோன்றுமா இல்லையா? ஒரு வேளை குறைந்த பட்ச கவனிப்பாகவது குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு கருத்து எழுதப்பட்டிருக்கிறதோ?

- பாபா படத்தில் ரஜினி ஏதோ ஒரு யோசனை செய்வது போல சில வரிகள் வரும். கிட்டத்தட்ட இதே கருத்துடன்.

- பாபா படத்தின் வசனகர்த்தா 'எஸ்.ரா' வாம். வலைப்பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்தது! எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள் பல அந்த படத்தில் இருந்தது. முக்கியமாக ரஜினியின் உள்மன நிலையை அப்படியே பிரதிபலித்த படம் அது.

2/05/2006

கோழையும் எழுச்சியும்

கோழையை எழுச்சி பெறச் செய்தால் பேயோடும் போராடுவான்.

- அடேங்கப்பா, என்ன ஒரு அருமையான கருத்து இது. இதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வார்த்தை 'எழுச்சி'. அதுவும் கோழையின் எழுச்சி. கோழை என்றால் யார்? பயப்படுபவர்களை கோழை என்று சொல்வார்கள். எதற்கு பயப்படுபவர்கள், ஒரு செயலைச் செய்வதற்கோ அல்லது முன்னேற்றத்திற்கான போராட்டத்திலிருந்து விலகுபவர்களையோ கோழை என்பார்கள். ஆனால் இங்கு, கோழை ஒருவனை எழுச்சி பெறச் செய்தால், பேயோடு கூட போராடுவான் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பேய் என்பது மனித மனதின் ஆழமான ஒரு பயமாக முன் வைக்கப்படுகிறது. அதனோடே போராடக்கூடியவனாக ஒரு கோழை மாற முடியும் என்றால், எதனோடும் அவன் போராடுவான் என்பது பொருள்.

ஒருவேளை நாமே (நம்மையும் அறியாமல்) கோழையாக் இருந்தால் இதனை படிக்கும் போது நம்மிலும் எழுச்சி ஏற்படுவது போல ஒரு மாயை உருவாகுவது.. இந்த கருத்தின் வெற்றியோ?!

இத்தகைய எழுச்சியை கோழையாக இருக்கும் ஒருவனுக்கு உருவாக்குவது எவ்விதம்?

1/30/2006

வணக்கம்..

வணக்கம்.

நான் கிறுக்கிப்பழகும், எண்ணங்களை முன் வைக்கும் இடமாக இந்த 'பலகை' இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.