2/11/2006

நீர்க்குமிழிகள்

வார்த்தைகள் வெறும் நீர்க்குமிழிகள், செயல்களே தங்கத் துளிகள்.

படிக்கும் போதே.. உள்ளுக்குள் தோன்றும் வார்த்தைக் குமிழிகள் உடைந்து போவது போலத் தோன்றவில்லையா என்ன?! ஆனால் என்ன.. அனுபவித்துப்படிக்க வேண்டும்...!

நம்மில் பலர் வார்த்தைகளை அதிகம் இறைத்துவிட்டு, அவசரப்பட்டு விட்டுவிட்டு திண்டாடுபவர்கள். இந்த திண்டாட்டம், எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். சில தினங்களுக்குப்பிறகு, இந்த திண்டாட்டம், வருத்தப்படுகின்ற நிலைக்கு வந்த பிறகாவது சிலர் திருந்துவதுண்டு.

மனிதர்களாயிற்றே, திரும்பவும் திரும்பவும் தவறு செய்வது இயல்பாயிற்றே. அறிந்ததை மறந்துவிட்டு, திரும்பவும், தவறு செய்வார்கள். வார்த்தைகளை இறைப்பார்கள். இந்த குணத்திலிருந்து வெளிவரவேண்டிய அவசியம் வெற்றிபெற விரும்பும் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

மெளனம்... பேச்சுக்கள் அற்ற அந்த மவுன நிலையை ஆன்மீகவாதிகள் விரும்புவது போலவே நானும் விரும்புகின்றேன். செயல்களாக என் வாழ்க்கை எப்பொழுதும் அமைந்துவிடக்கூடாதா என்ற எண்ணம் அவ்வப்போது வராமல் இருப்பதில்லை!

மொட்டைமாடி தனிமையில், இரவு நேரத்தின் குளுமையில் மல்லாந்து படுத்துக் கொண்டு வான் பார்க்கும் நேரம் எங்கிருந்துதான் இத்தனை மன ஒருமைப்பாடும் வெற்றிக்கு தேடும் மனநிலையும் வருமோ தெரியவில்லை, காலையில் எழுந்து தினசரி வேலைகள் செய்ய ஆரம்பித்தவுடன் அது காணாமல்தான் போய்விடுகிறது. ஆனாலும் எண்ணங்களே வாழ்க்கையாக உருமாறுகின்றன என்று பலர் எழுதியிருக்கிறார்கள். என்றேனும் இந்த எண்ணங்களும் உருமாறும் என்ற நம்பிக்கை, தினப்படித் தடைகளையும் மீறி, தடைபோடும் உறவுகளையும் மீறி, முடிவுக்கு வந்துவிட்ட அலட்சியப்பார்வை வீசும் நெருக்கமானவர்களையும் மீறி தள்ளி நின்று ஆச்சரியப்பட வைக்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அதற்கு இன்னும் எத்தனையோ காலம் செல்ல வேண்டும்.
ஒரு வேளை வாழ்க்கை முழுமையுமே ஆகலாம்!

--
மேலே எழுதிய சிந்தனை 'முகரம்' தினத்தன்று எழுதி வைத்தது. இன்று காலையில் வேறொரு பொன்மொழி கண்ணில் பட்டது. அது....

தெரிந்ததை சொல்லிவிடாதே.. முடிந்ததை செய்துவிடாதே!

வேடிக்கைதான். நேற்று எழுந்த சிந்தனைக்கு முற்றிலும் மாற்றல்லவா இது?! ஒருவேளை கவனமாக இருக்கச்சொல்கிறார்களோ?! கொஞ்சம் விகர்ப்பமாக சிந்தித்தால் இந்த கருத்து, எல்லாரிடமும் அவர்களையும் அறியாமல் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. படிப்பவர்களாகட்டும், வேலையில் இருப்பவர்களாகட்டும், எல்லோரிடமும் இப்படி ஒரு எண்ணம் கண்டிருக்கிறேன். தெரிந்ததை சொன்னால் அவர்கள் மதிப்பு போய்விடும் என்று எண்ணுவார்கள். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு சிலாக்கியத்தக்க குணமில்லை. ஒருவர் சொல்லாவிட்டால், இன்னொருவர்! அவருமில்லாவிட்டால் வேறொருவர். இதில் எங்கிருந்து வந்தது சொல்லாமல் இருந்தால் மதிப்பு என்பது. என்ன முன்னே பின்னே கொஞ்ச காலம் ஆகும் ஒருவர் தெரிந்துகொள்ளுவதற்கு. அவ்வளவுதானே!?

அதிலும், முடிந்ததை செய்துவிடாதே...! ஏன்? எனக்கென்னமோ இந்த வரிகளில் உடன்பாடில்லை.

No comments: